44 இலங்கையர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை
வெவ்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை அளிக்கப்பட்டுள்ளது.
புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு, அரச உத்தரவின் பேரில் இவர்கள் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
பொது மன்னிப்பைப் பெற்ற இந்த 44 இலங்கையர்களும் உரிய காலத்தில் ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கத்தினால் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து அவர்களைப் பாதுகாப்பாக நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை உறுதி செய்யவுள்ளதாக அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.