
மனித உடலால் உணரப்படும் அளவை விட அதிகரிக்கும் வெப்பநிலை
வெப்பமான வானிலையானது இன்றையதினமும் மனித உடலால் உணரப்படும் அளவை விட அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடுமென அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
நிலவும் வெப்பமான வானிலையினால் பணியிடங்களில் உள்ளவர்கள் அதிகளவான நீரைப் பருக வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, வீட்டில் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.
இதேவேளை, தற்போது நிலவும் வெப்பமான வானிலையைக் கருத்திற் கொண்டு பாடசாலை நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதிக வெப்பநிலைக்கு உள்ளாகும் வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவதைத் தடுக்குமாறும் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்யும் போது வெப்பநிலையைக் கருத்திற் கொள்ளுமாறும் அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மாணவர்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் சோர்வைப் போக்க இரண்டு நேரங்கள் சிறிய இடைவேளை எடுக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.