
யோஷித மற்றும் டெய்சி ஆச்சி மீது வழக்கு பதிவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் ‘டெய்சி ஆச்சி’ என்றும் அழைக்கப்படும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோரை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களாக பொலிஸார் பெயரிட்டு, பணச்சலவை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யோஷித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கில் 59 மில்லியன் ரூபாய்க்கு மேல் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு அவர் மீதான விசாரணை தொடங்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
பணம் எவ்வாறு வைப்பிலிடப்பட்டது என்பதற்கான நியாயமான விளக்கத்தை யோஷித வழங்கத் தவறிவிட்டார் என்று அவர் கூறினார்.
மேலும் விசாரணைகளில், கேள்விக்குரிய கணக்கு டெய்சி பொரெஸ்டுடன் இணைந்து நடத்தப்பட்டது தெரியவந்தது. இதன் விளைவாக, யோஷிதவுடன் டெய்சியையும் வழக்கில் சந்தேக நபராக சேர்க்குமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
டெய்சிக்கு ஏற்கனவே வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேக நபர்கள் மீதும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் எஸ்எஸ்பி மனதுங்க கூறினார்.