
வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் காணப்படும் கிராமிய வீதிகளைப் புனரமைப்பு செய்வதற்கும் மற்றும் மேம்படுவதற்கும் அமைச்சரவை அனுமதி
வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் காணப்படும் கிராமிய வீதிகளைப் புனரமைப்பு செய்வதற்கும் மற்றும் மேம்படுவதற்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல் அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் முக்கிய பணியாக அடையாளங் காணப்பட்டுள்ளது
வீதியைப் புனரமைப்புச் செய்தல், நிர்மாணித்தல் மற்றும் பராமரிப்பதற்காக விரிவான அணுகுமுறை அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பல வீதிகள் புனரமைக்கப்பட வேண்டிய நிலைமையில் காணப்படுவதுடன், ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 1,500 கிலோமீற்றர்கள் வடமாகாணத்திலும் மற்றும் 500 கிலோமீற்றர்கள் கிழக்கு மாகாணத்திற்கும் முன்னுரிமை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்காக வீதிகளைத் தெரிவு செய்வதற்காகப் பொதுமக்கள், நிதியனுசரணை வழங்குகின்ற அமைப்புக்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பங்கேற்பைப் பெற்றுக் கொள்வதுடன், விதந்துரைக்கப்பட்டுள்ள வீதிகளின் பட்டியலுக்கு மற்றும் குறித்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்கமைய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.