
வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை
கடந்த நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையை பெறாத மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த நெற்பயிர்களுக்காக 9,368 விவசாயிகளின் கணக்குகளில் நாளை (19) 202 மில்லியன் ரூபாவை வைப்பிலிட திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திருகோணமலை மாவட்டத்தில் சேதமடைந்த 6,671 விவசாயிகளின் நெற்பயிர்களுக்கு 21 ஆம் திகதிக்குள் 98 மில்லியன் ரூபாய் வங்கியில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களுக்கான காப்பீட்டு இழப்பீடாக இதுவரை 306 மில்லியன் ரூபாய் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.