
ஹெட்டிப்பொல துப்பாக்கிச்சூடு – சந்தேக நபர் கைது !
குளியாப்பிட்டி, ஹெட்டிபொல பிரதேசத்தில் நேற்று (27) இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை ஹெட்டிபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மகுலகம பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்த துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹெட்டிபொல பொலிஸ் பிரிவின் மகுலகம பகுதியில் நேற்று இரவு (27) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் காயமடைந்து குளியாப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு சிறுமி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஹெட்டிபொல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்த சிறுமி 9 வயதுடையவர் என்றும், ஹெட்டிபொல, மகுலகம பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், இறந்த சிறுமி தனது பாட்டியுடன் வீட்டில் தங்கியிருந்தபோது, அருகில் இருந்த சிலர் பன்றிகளை வேட்டையாடும் சத்தம் கேட்டு, வீட்டை விட்டு வெளியே வந்து விசாரித்த போது, அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த பாட்டி குளியாப்பிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை சிறுமியின் சடலம் குளியாப்பிட்டி மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.