முக்கிய ஆய்வுத்திட்டத்தை கைவிட்டது நாசா

முக்கிய ஆய்வுத்திட்டத்தை கைவிட்டது நாசா

நிலவின் தென் துருவத்தின் மேற்கு முனையில் ‘நோபில் கிரேட்டர்’ என்ற பகுதியில் நீர் மற்றும் பனிக்கட்டிகள் இருக்கிறதா? நிலவில் பனி அடுக்குகள் எங்கு இருக்கின்றன? அதில் என்ன மூலக்கூறுகள் இருக்கின்றன? எவ்வளவு அடி ஆழத்தில் பனிக்கட்டிகள் இருக்கின்றன? என்பதை அறிந்து கொள்ள அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

இதற்காக, 433.5 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டு ‘வைபர் ரோவர்’ என்ற திட்டத்தின் மூலம் ரோவர் ஒன்று நிலவுக்கு அனுப்பப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டு நாசா முறைப்படி அறிவித்தது.

நிலவில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அது நிலவு குறித்த அடுத்தக்கட்ட ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

கடந்த 2023-ம் ஆண்டின் இறுதியில் இந்த ரோவரை நிலவில் தரையிறக்க நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால், ரோவர் மற்றும் லேண்டரை உருவாக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்தத் திட்டம் 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் முழுமையடையும் என்றும், கூடுதலாக 176 மில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் காலதாமதம் மற்றும் அதிக பட்ஜெட் ஆகியவற்றை காரணம் காட்டி இத்திட்டத்தைக் கைவிடுவதாக நாசாவின் அறிவியல் திட்ட இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா பாக்ஸ் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )