ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையானோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கின்றனர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையானோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கின்றனர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளதாகவும், சுதந்திரக் கட்சியைப் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நிறைவேற்று சபையின் 90% பேரின் இணக்கப்பாட்டுடன் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலமான வலையமைப்பு ஏற்கனவே செயற்பட ஆரம்பித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (05) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

”போக்குவரத்துத் துறையினால் சுற்றுச்சூழல் கட்டமைப்புக்கு பல சேதங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை பிரதானமானது. இதற்கு தீர்வாக, புகை பரிசோதனைச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதன்படி, நாட்டின் வளிமண்டலத்தின் தரத்தை நல்ல நிலையில் பராமரிக்க முடிந்துள்ளது.

மேலும், போக்குவரத்து அமைச்சு, கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழு ஆகியவை இணைந்து அடுத்த 6 மாதங்களுக்குள் வளி மாசடைவதை அளவிடும் நிலையங்களின் எண்ணிக்கையை நூறாக உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்தத் தரவுகள் அனைத்தையும் ஒரே இடத்திற்குக் கொண்டு வருவதற்கும், உலகில் எங்கிருந்தும் எந்தவொரு குடிமகனுக்கும் புகை உமிழ்வு நிலைமைகளை ஓன்லைனில் நேரடியாகப் பார்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், வாகன புகை உமிழ்வு சான்றிதழ் பெற்ற பின்னர் அதே இடத்தில் இருந்து காப்புறுதி மற்றும் வாகன அனுமதிப் பத்திரம் பெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நாடளாவிய ரீதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும், வீதி விபத்துகளைக் குறைக்கும் வகையில், பொலிஸாரினால் வழங்கப்படும் புள்ளிவழங்கும் முறைமைக்குத் தேவையான தரவுக் கட்டமைப்பு மற்றும் பொலிஸாருக்கு வழங்க வேண்டிய உபகரணங்கள் பெறுவதற்கான கேள்விமனு கோரும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளன. அடுத்த மாதத்திற்குள் பொருத்தமான நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும், சாரதிகளினால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு அமைய புள்ளிகளை குறைக்க இருப்பதோடு அதனை நடைமுறைப்படுத்த முன்னர் செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு அறிவூட்டல் வாட்ஸ்அப் செய்திகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களின் பின்னர் இது தொடர்பான சட்டம் செயற்படுத்தப்படும்.

அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளது. அந்த தீர்மானத்தை எமது கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட கட்சியின் அதிகாரிகள் மட்டுமன்றி சு.கவை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுஜன பெரமுனவின் கீழ் பாராளுமன்றத்திற்கு தெரிவான 14 உறுப்பினர்களில் 08 உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு அகில இலங்கை நிறைவேற்று சபையிலுள்ள 90% உடன்பாட்டுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது . எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலமான ஏற்பாட்டு வலையமைப்பு தற்போதே தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )