40 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 40 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய கொட்டாவை ருக்மல் சந்தியில் கார் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது ஒரு கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் காரில் பயணித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது குறித்த பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் உள்ள வீட்டில் சோதனை நடத்தப்பட்டிருந்தது.
அதன்போது 12 கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்தினால் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 15 இலட்சம் ரூபாவும் மீட்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர் குறித்த பகுதியில் உள்ள வீடொன்றை வாடகைக்கு பெற்று அதில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அவர் இரண்டு வீடுகளுக்கு உரிமையாளர் என்பது கண்டறியப்பட்டதுடன் அங்கும் சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன.
குறித்த இரண்டு வீடுகளில் ஒன்றில் கொக்கெய்ன் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்களும் மீட்கப்பட்டன.
இதன்போது சந்தேகநபரின் மனைவியும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் டுபாயில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய வாசன சமந்த பெர்னாண்டோ எனப்படும் டுபாய் கபிலவுக்கு சொந்தமானது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.