கொரோனாவிலிருந்து மீள்வோர் இதய பாதிப்பை தடுக்க என்ன செய்யவேண்டும்?

peoplenews lka

கொரோனாவிலிருந்து மீள்வோர் இதய பாதிப்பை தடுக்க என்ன செய்யவேண்டும்?

கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டு முதல் இரண்டு வாரங்களில், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக லேன்செட் ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், முழுமையான அபாயங்கள் அதிகளவில் ஏற்படவில்லை என்றும், கொரோனாவிலிருந்து மீள்வோருக்கு இதய பாதிப்புகள் எவ்வளவு நாள்களில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என மதிப்பிடுவதற்கு மேலதிக ஆய்வுகள் தேவை என்றும் லேன்செட்டின் அந்த ஆய்வு தெரிவித்திருந்தது.
‘தி லான்செட்’ இதழில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வு முடிவின்படி, “2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை ஸ்வீடனில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,48,481 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 86,742 கொரோனா நோயாளிகளுக்கு கடுமையான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் பாதிப்பிற்கான ஆபத்து இருந்தது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதர்சனத்தில் இப்படியான இதய பாதிப்புகள் கொரோனா நோயாளிகள் அனைவருக்குமே ஏற்படுமா, ஆம் எனில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் இதய நலனில் எந்தெந்த விஷயங்களிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும், கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியவர்கள் யார், கொரோனாவுக்கும் இதய பாதிப்புக்கும் என்ன தொடர்பு என்பது பற்றி இதயவியல் நிபுணர் விஜய் சேகரிடம் கேட்டோம். அவர் நம்மிடையே பகிர்ந்துக்கொண்ட சில தகவல்கள் இங்கே:
“கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு, கொரோனாவின் தாக்கத்தால், உடலில் ரத்த உறைதல் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கும். இந்த ரத்த உறைதலானது, கொரோனா பாதிப்பின் போதும் ஏற்படலாம், அல்லது பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு இரண்டு மூன்று வாரங்களுக்கு பிறகும் ஏற்படலாம்.
அதேநேரம் கொரோனா பாதிப்பு உறுதியான அனைவருக்குமே இந்த பாதிப்புகள் நிச்சயம் ஏற்படும் என்றில்லை. ஆகவே பதற்றமடைய வேண்டாம். கூடுதல் முன்னெச்சரிக்கை மட்டும் போதுமானது. எல்லோருக்கும் வராது – சிலருக்குதான் வரக்கூடும் எனும்போது, யாருக்கெல்லாம் ஏற்படலாம் என்றால்…
* கொரோனா சிகிச்சையின்போது ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொண்டவர்களுக்கு, இதய பாதிப்பு – பக்கவாதத்துக்கான சாத்தியம் அதிகம்.
* கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் உருவானவர்கள், அங்கும் தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகள் ஆகியோருக்கு இந்த நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது.
இவற்றில் ஸ்டீராய்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படும் நபர்களின் பட்டியலில், ஏற்கெனவே இதய பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள்தான் அதிகம் உள்ளனர் என்பதால், அவர்கள் இனி கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். முக்கியமாக சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய பிறகு, தங்கள் உடல்நலனில் இவர்கள் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
அடுத்ததாக உள்ள தீவிர கொரோனா சிகிச்சை பெற்று வீடுதிரும்புவோரை பொறுத்தவரை, இவர்களுக்கு உடலில் ரத்த சர்க்கரை அளவு சீரற்று போகும் சூழலும், ரத்த உறைதலுக்கான வாய்ப்பும் அதிகமாக இருப்பதை காண்கிறோம்.
ஆகவே, அப்படியானவர்கள் தங்களின் அடுத்தடுத்த நாட்களில் / வாரங்களில் ஏற்படும் அசௌகரியங்களை உதாசீனப்படுத்த வேண்டாம். கொரோனா நோயாளிகள் பலருக்கும், வீடுதிரும்பும்போது மருத்துவர்கள் சில வழிகாட்டுதல்களை பரிந்துரைப்பர். அது வாழ்வியல் மாற்றங்களாகவும் இருக்கலாம்; தொடர்ச்சியான மருந்து உட்கொள்ளுதலாகவும் இருக்கலாம். அதை தொடர்ந்து எடுத்துக்கொண்டாலேவும், பக்கவிளைவுகள் ஓரளவு தடுக்கப்படும்.
முன்னெச்சரிக்கை என்ன? – கொரோனா வந்தபிறகு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதை பற்றி ஆலோசிப்பதைவிடவும், கொரோனாவே வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசிப்பதே சரியான முன்னெச்சரிக்கையாக இருக்கும். அந்தவகையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது, ஆகச்சிறந்த முன்னெச்சரிக்கை.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட சர்க்கரை நோயாளி – இதய நோயாளிகளுக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும்கூட அதன்மூலம் கிடைத்திருக்கும் ஆன்டிபாடிகளால் மிதமான – லேசான கொரோனா பாதிப்புடன் அவர்கள் மீள்வர். இப்படியானவர்களுக்கு, நிச்சயம் மிகத்தீவிர கொரோனா தடுக்கப்படும். அதன்விளைவாக, தீவிர பக்கவிளைவுகளும் நிச்சயம் தடுக்கப்படும்.
மேலே லேன்செட் நிறுவனத்தின் ஆய்வும், தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்த்தவே செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும். குறிப்பாக வாழ்வியல் பாதிப்பு இருப்பவர்கள் (சர்க்கரை பாதிப்பு – இதய நோய் – உடல் ரத்த அழுத்தம்) போன்றவை இருப்போர், தடுப்பூசியை தவிர்க்கவே கூடாது.
‘சரி, கொரோனா வந்துவிட்டது… மருத்துவமனையிலிருந்து இப்போதுதான் வீடுதிரும்பியுள்ளேன். இதுவரை தடுப்பூசியும் எடுக்கவில்லை. இப்போது என்ன செய்வது’ எனக்கேட்டால், அசௌகரியங்கள் எதையும் நீங்கள் உதாசீனப்படுத்தக்கூடாது என்பதே பதில்.
உங்களுக்கு உடலில் நீர்ச்சத்து அடிக்கடி குறையும் வாய்ப்பு உள்ளதால், நிறைய தண்ணீர் குடியுங்கள்; நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் பழங்களை உட்கொள்ளுங்கள். இப்படியானவர்களுக்கு ரத்த உறைதலுக்கான வாய்ப்பும் உள்ளதென்பதால், சிகிச்சையளித்த மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். இதயம் சார்ந்து மருத்துவர்கள் ஏதேனும் மருந்து எடுக்கச் சொன்னாலோ, பரிசோதனை செய்யச் சொன்னாலோ… அதை பின்பற்றுங்கள். உங்களுக்கு அதிகம் சோர்வு ஏற்படக்கூடும். ஆனால் அதற்காக படுக்கையிலேயே இருக்கவேண்டாம். குறைந்தபட்ச உடலுழைப்பு அவசியம். அதேநேரம் தீவிர உடற்பயிற்சியை தவிர்க்கவும். வீட்டுக்குள் நடப்பது, உங்களின் அடிப்படை விஷயங்களை நீங்களே செய்வது, சற்று சூரிய ஒளியில் இருப்பது என்றிருக்கவும்.
இவையனைத்துக்கும் பின், உங்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவரின் அறிவுரைப்படி, குறிப்பிட்ட வாரங்களுக்குப் பின் கட்டாயம் நீங்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள். அதன்மூலம், இனியொருமுறை இப்படி தீவிர சிக்கலுக்கு நீங்கள் உள்ளாகாமல் காக்கப்படுவீர்கள்.
இனி தடுப்பூசி செலுத்துவோர் கவனத்துக்கு: நீங்கள் கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்கின்றீர்களோ, அல்லது கொரோனாவுக்கு முன்னராகவே தடுப்பூசி போடுகின்றீர்களோ, கீழ்வரும் விஷயத்தை கட்டாயம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் வேறு உடல்நல சிக்கலுக்காக ஏதும் மருந்துகளை பின்பற்றி வந்தால், அதை நிறுத்திவிட வேண்டாம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் – இதய நோயாளிகள், தடுப்பூசி செலுத்தும் நாளன்றும் உங்கள் மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஏதேனும் அலர்ஜிக்கு மாத்திரை எடுப்போரும்கூட, உங்கள் மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசித்துவிட்டு மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள். புற்றுநோய் போன்றஏதேனுமொரு பாதிப்புக்காக ஏற்கெனவே நீங்கள் மருத்துவமனைவாசியாக இருந்தால், அப்போது தடுப்பூசி விவகாரத்தில் மருத்துவரே உங்கள் வழிகாட்டுவார்

Share on

மருத்துவம்

peoplenews lka

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் டெங்கு!...

டெங்கு நோய் தாக்கம் பெரியவர்களை விடவும் சிறியவர்களுக்கே அதிகமாக ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது... Read More

peoplenews lka

குரங்கு அம்மைக்கு நோய்க்கான தடுப்பூசி தொடர்பில் தகவல்....

குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி தொடர்பில் சுகாதார துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்... Read More

peoplenews lka

சிறுநீரகத்திலிருத்து கைப்பற்றபப்ட்ட பாரிய கல்...

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் போது மீட்கப்பட்ட அதிசயிக்க வைக்கும் சிறுநீரக கல்.. Read More

peoplenews lka

பாலியல் பிரச்சினை, மலட்டுத்தன்மை?...

கொவிட் தடுப்பூசி - பாலியல் பிரச்சினை, மலட்டுத்தன்மை?.. Read More