நினைவேந்தலில் ஈடுபட்டோர் கைது

நினைவேந்தலில் ஈடுபட்டோர் கைது

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி உட்பட 3 பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்   ஞாயிற்றுக்கிழமை இரவு   (12) திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் பதிவாகியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் (13) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரியவருகின்றது.

சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40),  பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22), சமூக செயற்பாட்டாளர் செல்வவினோத்குமார் சுஜானி (வயது 40), தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையின் போது மாணவியின் தாயை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது மகளான தேமிலா தனது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாகவும் அதனை தடுக்க முயற்சித்த பெண் பொலிஸாருக்கு கத்தி காயம் ஏற்பட்டதால் அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  இதனால் பல்கலைக்கழக மாணவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக ஞாயிற்றுக்கிழமை (12)  சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சம்பூர் பொலிஸார், நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து குறித்த நடவடிக்கையை நிறுத்துமாறு கூறிய நிலையில் அதில் ஈடுபட்டிருந்தவர்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாது முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுத்ததாகவும், இந்நிலையிலேயே குறித்த கைது சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )