
பிரிட்டனில் இருந்த வந்த மர்ம பொதியில் காத்திருந்த அதிர்ச்சி
இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் நாளாந்தம் மேற்கொள்ளும் கண்காணிப்புப் பணிகளின் போது, கொழும்பில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதியில் இருந்து போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்து இலங்கையின் கிரிபத்கொடை முகவரிக்கு அனுப்பப்பட்ட குறித்த பொதியை, சந்தேக நபர் முன்னிலையில் திறந்து பார்த்தபோது, அதில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 65 கிராம் குஷ் மற்றும் 500 மில்லி லிட்டர் திரவ கொக்கேய்ன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 13 மில்லியன் ரூபா என கூறப்படுகிறது.
சந்தேக நபர் ராகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என்பதுடன், சுற்றுலாத் துறையில் பணியாற்றி வருகிறார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைக்காக சந்தேக நபரும் வழக்குப் பொருட்களும் இலங்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த கோக்கேய்ன் போதைப்பொருள் ஒரு கூரியர் நிறுவனத்தில் திரவ வடிவில் கண்டுபிடிக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும் என சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கோட தெரிவித்தார்.