
நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும்
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள் எனவும், இது விடயத்தில் நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவுபெறவில்லை. அவை நடைபெற்றுவருகின்றன. விசாரணையில் தெரியவரும் விடயங்களுக்கு அமைய தொடர்புடையவர்களுக்கு வழக்கு தொடரப்படும்.
குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டிய தேவைப்பாடு நீதி அமைச்சருக்கு கிடையாது. குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தவும், வழக்கு தொடுக்கும் விடயத்தில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அழைத்து ஜனாதிபதியும் பேச்சு நடத்திவருகின்றார். எனவே, நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும். இது விடயத்தில் எவரும் அச்சம்கொள்ள வேண்டியதில்லை.” என தெரிவித்துள்ளார்.