தோட்டத்தொழிலாளர்களை உரிமையாளராக்குவதன் மூலமே சம்பள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணமுடியும்

தோட்டத்தொழிலாளர்களை உரிமையாளராக்குவதன் மூலமே சம்பள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணமுடியும்

மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லையெனவும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தைக் கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றோம் எனவும் தொழிலாளர் தேசிய சங்கத் தலைவரும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி என்பவற்றின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல், ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதி செயலாளர் சோ.ஸ்ரீதரன், இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன், கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சிசபைத் தேர்தல், தற்போதைய அரசியல் நடப்புகள் பற்றியும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

இச்சந்திப்பின் பிறகு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட திகாம்பரம் எம்.பி.,

”உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு நாம் தயாராகி வருகின்றோம். இது சம்பந்தமாக தோட்டத் தலைவர்கள் உட்பட கட்சி பிரமுகர்களுடன் கலந்துரையாடினோம்.

தற்போதைய அரசாங்கம் வாய்வீச்சு அரசாங்கமாகவே உள்ளது. செயலில் எதுவும் நடப்பதாக தெரியவில்லை.

மலையக மக்கள் கடந்தமுறையும் தேசிய மக்கள் சக்திக்கு 50 ஆயிரம் வரையான வாக்குகளையே வழங்கினர். மலையகத்திலுள்ள கட்சிகளுக்குதான் கடந்தமுறையும் வாக்குகளை வழங்கினார்கள்.

மலையக மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும் என்றார்கள், எதிரணியில் இருக்கும்போது மலையக மக்கள் தொடர்பில் அதிகம் கதைத்தார்கள். தற்போது அதிகாரத்தில் இருக்கும்போது தீர்வை முன்வைக்காமல் உள்ளனர்.

வரவு செலவுத் திட்டத்தில்கூட மலையகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட நிதியில்கூட இந்திய நிதியே பெருமளவு உள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுகூட கைகூடுமா என தெரியவில்லை. எனவே, தோட்டத்தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளராக்குவதன் மூலமே இந்தச் சம்பள பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை காணமுடியும்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)