“50 சதவிகித ஹமாஸ் அமைப்பினரை வீழ்த்திவிட்டோம்”

“50 சதவிகித ஹமாஸ் அமைப்பினரை வீழ்த்திவிட்டோம்”

ஹமாஸ் அமைப்பினர்  கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும், காசா முனையின் நஸ்ரத் அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 4 பணய கைதிகளையும் சமீபத்தில் இஸ்ரேல் அதிரடியாக மீட்டது. மேலும், 116 பேர் இன்னும் பணய கைதிகளாக உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நடவடிக்கையிலும் காசா முனை மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் ஆயுதக்குழுவினரும் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்ற்னார்.

இரு தரப்பும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் இஸ்ரேல் படையினரும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், காசா முனையின் ரபாவில் 50 சதவிகித ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

ரபா நகரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 4 பிரிவுகளாக செயல்பட்டுவருவதாகவும், இதில் 2 பிரிவுகள் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், எஞ்சிய 2 ஹமாஸ் பிரிவுகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ரபாவில் பணியை முடிக்க மேலும் சில வாரங்கள் எடுக்கலாம் என்றும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )