“ஜனாதிபதி ரணிலிடம் மட்டுமே நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான இயலுமை உள்ளது”

“ஜனாதிபதி ரணிலிடம் மட்டுமே நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான இயலுமை உள்ளது”

நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான இயலுமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே உள்ளது. எனவே நாட்டின் முன்னேற்றத்திற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஒட்டுமொத்த மகா சங்கத்தினதும் ஆசி கிட்டும் என கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் தலைவரும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி அக்கமஹா பண்டித வண.இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (27) கொட்டாவ ருக்மலே ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாரையின் தலைமை மகாநாயாக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதன் பின்னர் நிகழ்த்தப்பட்ட விசேட அனுசாசனத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது அடைந்து வரும் பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றம் குறித்து தேரருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “நாடு மீண்டும் இவ்வாறானதொரு பாதாளத்தில் வீழ்ந்துவிடாமல் இருக்க நாட்டை புதிய பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்காக எதிர்வரும் வருடங்களில் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.” என தெரிவித்துள்ளார்.

நாடு பேரழிவை எதிர்கொள்ளவிருந்த வேளையில் ஜனாதிபதிப் பதவியை ஏற்குமாறு வண.இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர் விடுத்த அழைப்பை இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்த ஜனாதிபதி, குறுகிய காலத்திற்குள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு அன்று தான் தீர்மானித்ததாகவும், நாட்டுக்காக முன்வர விருப்பம் தெரிவித்த அனைவரினதும் ஆதரவைப் பெற்று மிகக் குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறான நெருக்கடிகளை எதிர்நோக்கிய உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது இலங்கைக்குக் கிடைத்த தனித்துவமான வெற்றியாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )