தேர்தல் கண்காணிப்புக்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய தூதுக்குழு

தேர்தல் கண்காணிப்புக்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய தூதுக்குழு

செப்டெம்பர் 21 அன்று நடைபெறவுள்ள 2024 ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் அவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் செயல்முறைகளுடன் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.

இலங்கையுடனான அர்ப்பணிப்பு, பங்காளித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில், முன்னதாக ஆறு சந்தர்ப்பங்களில் ஐரோப்பிய ஒன்றியம் கண்காணிப்பு குழுக்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளது.

“இந்த ஆண்டு இலங்கையில் தேர்தல் கண்காணிப்புப் பணியமர்த்தப்பட்டமையானது, நாட்டில் நம்பகமான, வெளிப்படையான மற்றும் அமைதியான தேர்தல்களை ஆதரிப்பதில் எங்களின் நீண்டகால அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது” என்று பார்வையாளர் குழுவின் தலைவர் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் 2022 அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ஜனநாயகத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும். ஜனநாயக விழுமியங்களை முழுமையாக மதிக்கும் வகையில், சீர்திருத்தங்கள் மற்றும் நீடித்த மீட்சியின் பாதையில் தொடர்ந்து முன்னேற்றம் காண இலங்கைக்கு இந்தத் தேர்தல் முக்கியமானது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு பணியானது பார்வையாளர்களின் வெவ்வேறு குழுக்களைக் கொண்டுள்ளது.

பிரதி பிரதான கண்காணிப்பாளர் மற்றும் ஒன்பது தேர்தல் நிபுணர்கள் அடங்கிய பிரதான குழு ஏற்கனவே கொழும்பு வந்துள்ள நிலையில், 26 நீண்ட கால கண்காணிப்பாளர்கள் பணியில் இணைந்துகொள்வதுடன், தேர்தல் பிரச்சாரத்தை பின்பற்றுவதற்காக நாடு முழுவதும் அனுப்பப்படுவார்கள்.

அதன்பிறகு, 32 குறுகிய கால கண்காணிப்பாளர்கள் தேர்தல் வாரத்தில் பணியை வலுப்படுத்துவார்கள், மேலும் நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள்.

17.1 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், 5 ஆண்டு காலத்திற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சகத்யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் போட்டியில் முன்னணியில் உள்ளனர்.

(ஜெயராம்)

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )