
ரயில் – வேன் மோதி விபத்து
வெலிகம, பெலேன பகுதியில் உள்ள ரயில் கடவையில் இன்று (14) காலை விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
பெலியத்தையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த ரஜரட்ட ரயில், வேன் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் வேன் பலத்த சேதமடைந்ததோடு, சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டது.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான சேவையில் ஈடுபட்டுவரும் வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும், விபத்து நடந்த நேரத்தில் வேனில் சாரதி மட்டுமே இருந்துள்ளார்.
விபத்து நடந்த நேரத்தில் ரயில் கடவையில் நிறுவப்பட்ட எச்சரிக்கை மணி மற்றும் ஒளி சமிக்ஞை அமைப்பு செயலிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இந்த விபத்து மற்றும் எச்சரிக்கை சமிக்ஞைகள் செயல்படத் தவறியது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka