லயன்களில் வாழ்வோருக்கு கிராமத்தில் வாழும் உரிமை !

லயன்களில் வாழ்வோருக்கு கிராமத்தில் வாழும் உரிமை !

லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு முதல் தடவையாக கிராமங்களில் வாழ்வதற்கான உரிமை வழங்கப்படுமெனவும், இதற்காக லயன் காணிகளின் குத்தைகளை இரத்துச் செய்து அரசாங்கம் பொறுப்பேற்க உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட வர்த்தகர்களுடன் நடத்திய சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

நுவரெலியா வர்த்தக சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டதுடன், பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான பல யோசனைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் சரியான வேலைத்திட்டத்துடன் நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக அங்கு கூடியிருந்த நுவரெலியா மாவட்ட வர்த்தக சமூகத்தினர் உறுதியளித்

தனர்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளருமான கே. கே. பியதாச, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் டபிள்யூ. ஜி. ரணசிங்க, ஹற்றன் – டிக்கோயா முன்னாள் மேயர் எஸ். பாலச்சந்திரன், ஹற்றன் வர்த்தக சங்க செயலாளர் எஸ். சோமசுந்தரம் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நுவரெலியா மாவட்ட கல்விசார் நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நுவரெலியாவில் நடைபெற்றது.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனை மாற்ற இடமளிக்க முடியாதெனத் தெரிவித்த நுவரெலியா மாவட்ட கல்விசார் நிபுணர்கள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது நாட்டை நேசிக்கும் அனைவரினதும் பொறுப்பு என சுட்டிக்காட்டினர்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மலையகத் தமிழ் மக்களுக்கு சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக அடுத்த வருடம் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் மாநாடொன்று கூட்டப்படும் என குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள சமூக நீதி ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை விரிவாக ஆராய சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நுவரெலியா மாவட்ட தொழிலதிபர்களினதும், தொழில் வல்லுநர்களினதும் பிரச்சினைகள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன் அதற்கான தீர்வுகள் அடங்கிய பிரேரணையும் முன்வைக்கப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினமான வடிவேல் சுரேஷ் இந்நிகழ்வில் உரையாற்றியதோடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அன்று முதல் பெருந்தோட்ட மக்களுக்காக பல பணிகளை செய்துள்ளதோடு, அந்த மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் அவர் எதிர்காலத்திலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவார் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட இந்து பூசகர்கள் குழுவின் தலைவர் வேலு சுவிஸ்வர சர்மா மற்றும் தொழில் வல்லுநர்கள் குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )