
கடவுளே அஜித்தே என்ற கோஷம் என்னை கவலையடைய செய்திருக்கிறது
சமீப காலங்களில் அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் “கடவுளே அஜித்தே” என்று கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடவுளே அஜித்தே என்ற கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது என்று நடிகர் அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இது தொடர்பான அவரது அறிக்கையில், “சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் க… அஜித்தே என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது.
எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.
என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள். வாழு வாழ விடு” என்று தெரிவித்துள்ளார்.
