
மாயமான தேசபந்து தென்னகோன் : பொலிஸார் வலைவீச்சு!
மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடங்கியுள்ளது.
அதன்படி, கொழும்பு உட்பட அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் நான்கு வீடுகளில் நேற்று (28) தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அந்த வீடுகளில் எதிலும் அவர் தங்கியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு எண் 6314/323 இன் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்துடன், கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது, குற்றப் புலனாய்வு திணைக்களித்தின் காவலில் உள்ள பாதாள உலக குழு உறுப்பினர் நதுன் சிந்தக எனப்படும் ஹரக் கட்டாவின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு குழுவைக் கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் டிசம்பர் 31, 2023 அன்று சென்றபோது குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.