மாந்தை நிலங்கள் மகாவலிக்குள் உள்ளீர்ப்பதற்கு எதிர்ப்பு
-மன்னார் நிருபர்-
மகாவலி ஜே வலயமாக்குவதற்கு மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் மாந்தை மேற்கு பிரதேச செயலாளரிடம் தகவல் கோரப்பட்டுள்ள நிலையில் வளமிக்க காணிகளை மகாவலி வலயத்திற்குள் உள்ளீர்க்க நாம் தயாராக இல்லை என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் இன்று (17) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
அரசாங்கம் நில அபகரிப்பை மேற்கொள்வதற்கு பல்வேறு அரச திணைக்களங்களை பயன்படுத்தி வருவது போல் நன்கு திட்டமிட்ட வகையில் சிங்களர்களை குடியேற்றும் மறைமுக நோக்கில் மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 15 கிராம அலுவலர் பிரிவுககள் கோரப்பட்டுள்ளது.
பாலி ஆறு, இலுப்பைக்கடவை, அந்தோனியார்புரம், கள்ளியடி, ஆத்திமோட்டை, கூராய், கோவில்குளம், பள்ளமடு, விடத்தல்தீவு மேற்கு, விடத்தல்தீவு தெற்கு, விடத்தல்தீவு வடக்கு, விடத்தல்தீவு மத்தி, காயாநகர், பெரியமடு மேற்கு, பெரியமடு கிழக்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கி மகாவலி ஜே வலயமாக்குவதற்கு மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் மாந்தை மேற்கு பிரதேச செயலாளரிடம் தகவல் கோரப் பட்டுள்ளதாக அறிகின்றோம்.
இந்த திட்டத்தை முழுமையாக நிராகரிக்கின்றோம்.
இந்த பிரதேசம் மிகவும் வளமிக்க நிலப்பரப்பைக் கொண்டதாகும். பாலி ஆறு, சிப்பி ஆறு, பூங்கொடி ஆறு, பறங்கி ஆறு, கொடிகட்டி ஆறு, கல்பாடி ஆகிய ஆறுகளையும் மூன்று மாகாண நீர்ப்பாசன குளங்களையும் இருநூறுக்கு மேற்பட்ட சிறிய நீர்ப்பாசனக் குளங்களையும் 8472 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்களையும் வளமிக்க மேட்டுநிலத்தையும் தன்னகத்தே கொண்ட பிரதேசம் ஆகும்.
நில அமைப்பு ரீதியாக எந்த வகையிலும் மகாவலியுடன் தொடர்பு படுத்த முடியாத பகுதியை அரசாங்கம் மறைபொருள் நோக்கு நிலை நிகழ்ச்சி திட்டத்தில் தான் இம்முயற்சியை மேற்கொள்வதாக நாம் கருதுகின்றோம் .
இந்தப் பகுதியில் காணி உரித்து நிர்ணய திணைக்களம் தமது பணியை மேற்கொண்டு வரும் காலத்தில் எப்படி தகவல் சேகரிக்க முடியும் எனும் கேள்வியும் எழுகிறது.
எனவே இந்த தகவல் சேகரிப்பு முயற்சியை அரசாங்கம் நிறுத்த வேண்டும் இல்லையேல் இதற்கெதிராக மிகப்பெரிய போராட்த்தை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்படும்.
எந்தச் சந்தர்ப்பத்திலும் எமது வளமிக்க காணிகளை மகாவலி வலயத்திற்குள் உள்ளீர்க்க நாம் தயாராக இல்லை என்பதை மிகவும் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.