ஜனாதிபதி சட்டத்தரணி மு. சிற்றம்பலம் காலமானார்
வவுனியாவின் சிரேஸ்ட ஜனாதிபதி சட்டத்தரணி மு. சிற்றம்பலம் இன்று (28.06.2023) சுகவீனம் காரணமாக 80 ஆவது வயதில் காலமானார்.
வவுனியாவில் மாவட்ட சபை உருவாக்கப்பட்ட வேளையில் அதன் முதற் தலைவராகவும் பொது அமைப்புக்களின் தலைவராகவும் பதவி வகித்த அன்னார் வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக நீண்டகாலமாக பதவி வகித்ததோடு வவுனியா மாவட்டத்திற்கு பல்வேறு உதவிகளை புரிந்தவர் ஆவார்.
பல சிரமங்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வவுனியாவில் பண்டாரவன்னியனின் சிலையை நிறுவுவதற்கு போராடி வவுனியா மாவட்ட வளாக செயலகத்தில் அமைக்க முக்கிய காரணமாக அமைந்தார். இதன் காரணமாக அவர் குடும்பத்தோடு வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
யுத்த காலத்தில் கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வவுனியா மண்ணில் இருந்து சட்டத்துறையில் சிறப்பாக செயற்பட்டவராவார். 30 வருடங்களுக்கு மேலாக வவுனியாவில் வாழ்ந்து சட்ட சேவையினை வழங்கிய இவர், பணத்தை பற்றி சிந்திக்காது, பல மக்களுக்கு இலவச சேவையினை வழங்கியவர்.
பல இளம் சட்டத்தரணிகளுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் வழிகாட்டியாக இருந்து பல செயற்பாடுகளை செய்தவர்.
அன்னார் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான உடுப்பிட்டி மு. சிவசிதம்பரம் மற்றும் வவுனியாவின் பிரபல ஆசிரியர் மு.கந்தப்புவின் சகோதரராவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம்(30) குடியிருப்பு இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பூந்தோட்டம் இந்த மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.