பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு எனக்கு உள்ளது

பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு எனக்கு உள்ளது

இனம், சாதி, மதம் அன்றி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தலை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற்றாவிட்டால் 2035-2040 காலப்பகுதியில் மற்றுமொரு நெருக்கடி ஏற்படக்கூடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (02) கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற “Ask Me Anything” என்ற விசேட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையின் சகல துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான அறிஞர்கள், தொழில் வல்லுநர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். ஜனாதிபதிக்கு நேரடியாக தமது கேள்விகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டமையும் விசேட அம்சமாகும்.

இங்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டதுடன், ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சாதகமான பதில்களை வழங்கினார்.

கடவுச் சீட்டு பெறுவதில் உள்ள நெரிசலை விரைவில் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் தாம் விரும்பிய அமைச்சரவையை நியமிக்காது, நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை நியமிக்கவுள்ளதாகவும், இதற்காக மக்கள் தமக்கு விருப்பமானவர்களை புதிய பாராளுமன்றத்திற்கு அனுப்புவார்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், சிறுபான்மை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ள போது, ​​இந்நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2019 இல் வரி குறைப்பு மற்றும் அதிகப்படியான சலுகைகள் காரணமாக வருமானம் குறைந்தது. இதனாலேயே 2022 இல் பொருளாதார சிக்கல்கள் எழுந்தன. கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்ய வேண்டுமா என்று வினவ விரும்புகிறோம்.

எனவே, நாம் இப்போது ஒரு முடிவை எடுக்க வேண்டும். கொள்கை விவரங்களைப் பற்றி நான் பேசப் போவதில்லை. அடுத்த ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 3 பில்லியன் டொலர்களைப் பெற இருக்கிறோம். 2040-2042 வரை கடன் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்துடன் கூடிய ஒப்பந்தமும் உள்ளது. அதை இழக்க நாம் தயாரா? நம் நாட்டிற்கு நடைமுறைச் சாத்தியமற்ற மாற்றம் தேவையில்லை.

இந்த நெருக்கடியை சமாளித்து, 2042இற்குள் ஸ்திரத்தன்மையை அடைய முடியும். ஆனால் நாம் விரைவில் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாறவில்லை என்றால், 2035-2040இல் நாம் தொடர்ந்து கடன் வாங்கும்போது மற்றொரு நெருக்கடி ஏற்படலாம்.

எவ்வாறாயினும், போட்டித்தன்மை வாய்ந்த ஏற்றுமதி சார்ந்த, டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரமாக மாறுவதன் மூலம், தன்னிறைவான பொருளாதார மாற்றத்தை நோக்கி நாம் செல்ல முடியும். எங்களிடம் நிலம் போன்ற கணிசமான சொத்துக்கள் உள்ளன. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், உலக மக்கள் தொகை சுமார் 2 பில்லியன்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்தைக்குத் தேவையான உணவளிக்க நமது விவசாயத்தை நவீனப்படுத்த வேண்டும். இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2.5 மில்லியனில் இருந்து 5 மில்லியனாக உயர்த்த வேண்டும்.

சாதி, இனம் போன்று நீடித்து காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆணைக்குழுவொன்று தொடர்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறோம். இனம், சாதி, மதம் வேறுபாடின்றி அனைவரையும் பாதித்த பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தல் நடைமுறை காண கிடைத்துள்ளதையிட்டு ஜனாதிபதி என்ற வகையில் நான் பெருமையடைகிறேன்.

இந்த சூழ்நிலை ஒரு நாடாக ஒன்றிணைவதற்கும், தற்போதுள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் வாய்ப்பளிக்கும். குழந்தை பராமரிப்பு மற்றும் குடும்ப வன்முறை போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டியுள்ளது. ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பிரிவு இருந்தாலும், அதற்குள் மேலும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளையும் எடுப்பது அவசியம். சிலர் ஊழல் மோசடி தொடர்பான 400 கோப்புகள் பற்றி பேசுகின்றனர். அவற்றில் 15 பேர் மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்க கூடியவையாகும். எனவே, பேசிக்கொண்டிருப்பதை விடுத்து அதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

நாம் ஆட்சிக்கு வந்த பிறகு அதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை கோரினோம். ஊழல் தடுப்புச் சட்டம், குற்றச் செயல்கள் தொடர்பான சட்டம் போன்ற புதிய சட்டங்களை உள்ளடக்கிய ஊழல் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )