
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ள கலிப்ஸோ ரயில்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள கலிப்சோ ரயில், ஒரு நாளைக்கு 1 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பண்டாரவளையில் இருந்து பதுளை நோக்கி நாளாந்தம் பயணிக்கும் கலிப்சோ ரயில், கடந்த 17 ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியதாகவும், அன்றைய தினம் மாத்திரம் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம் சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் கலிப்சோ ரயிலுக்கு, ஒரு நாளைக்கு சுமார் நான்கு இலட்சம் ரூபாய் செலவாகிறது.
தற்போது, நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மலையக ரயில் பாதையின் அதிசயங்களை பார்த்து இரசிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக உள்ளனர். சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சிகளைக் காண வாய்ப்பளிக்கும் வகையில், தெம்மோதர அருகே 10 நிமிடங்களும், எல்ல 9 வளைவுப் பாலத்தில் 10 நிமிடங்களும் ரயில் நிறுத்தப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டுவதோடு சிறந்த சேவையையும் வழங்க ரயில்வே திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.