
எம்பிலிப்பிட்டிய உணவகத்தில் மான் மற்றும் மரை இறைச்சி விற்பனை ; மூவர் கைது
எம்பிலிபிட்டிய பதலங்கல பகுதியில் அமைந்துள்ள தனியார் உணவகமொன்றில் பாதுகாக்கப்பட்ட காட்டு விலங்குகளின் இறைச்சிகளை காட்சிப்படுத்தி, வைத்திருந்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடவலவதேசிய பூங்கா தலைமையகத்துடன் இணைந்த வனவிலங்கு அதிகாரிகளும் பனாகடுவ பகுதி பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளும் இணைந்து கடந்த 16ஆம் திகதி மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இந்த சோதனையின் போது, 4.9 கிலோகிராம் மரை இறைச்சி, 600 கிராம் உலர்த்தப்பட்ட மரை இறைச்சி மற்றும் 2.12 கிலோகிராம் மான் இறைச்சி அடங்கிய குளிர்சாதன பெட்டி ஒன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று எம்பிலிப்பிட்டியநீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து, ஒவ்வொரு சந்தேகநபரையும் 20 ஆயிரம் ரூபாய் சொந்தப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

