
போர் தமிழர்களுக்கு எதிராக இல்லை ; நாமல் ராஜபக்ச கருத்து
நாமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது, தமிழ் சமூகத்திற்கு எதிராக யாரும் போர் நடத்தவில்லை என்றும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.
தனது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு, எல்.டி.டி.ஈ.க்கு எதிராகவே போரை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
“முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பா ஆகியோரைக் கொலை செய்தது, அறந்தலாவையில் பிக்குகளை படுகொலை செய்தது, திகம்பதஹாவை தாக்கியது எல்.டி.டி.ஈ.யே” என நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
மேலும், வெற்றித் தினத்தை முன்னிட்டு பாதுகாப்புப் படையினருக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவிக்காதது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.

