
போலியான அமெரிக்க டொலர்களை வைத்திருந்த இரு வெளிநாட்டவர்கள் ஹபராதுவையில் கைது
போலியான அமெரிக்க டொலர்களை வைத்திருந்த இரண்டு வெளிநாட்டவர்கள் ஹபராதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (07) ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிலல்ல பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த இந்த இரு வெளிநாட்டவர்களும், வியாபார நிறுவனம் ஒன்றில் கொடுக்கல் வாங்கலுக்காக 400 கள்ள அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளனர்.
இது குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து தங்கியிருந்த இந்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, மேலதிகமாக 5,200 கள்ள அமெரிக்க டொலர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக 26 மற்றும் 27 வயதுடைய தஜிகிஸ்தான் (Tajikistan) நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலியான அமெரிக்க டொலர் நோட்டுக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

