ஐஸ்கிரீம் சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் பலி
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா பெட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னா. இவரது மனைவி பூஜா. இவர்களுக்கு 1½ வயதில் திரிசூல், திரிஷா ஆகிய இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று இவர்களது ஊருக்கு வாகனத்தில் கொண்டு வந்து ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டது. இதை பூஜா தனது 2 குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்தார். பின்னர் அவரும் சாப்பிட்டார். ஐஸ்கிரீம் சாப்பிட்ட சில மணி நேரத்தில் இரட்டை குழந்தைகளுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. மேலும் பூஜாவுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களை மாண்டியா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இரட்டை குழந்தைகள் திரிசூல், திரிஷா ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் பூஜா மாண்டியா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதே போல் இந்த ஊரில் பலர் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே இரட்டை குழந்தைகள் மரணம் சந்தேகத்துக்கு உரியது என்று அரகெரே பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.