“நிலாச்சோறு ஊட்டுவது போல சஜித்  போலி உறுதிமொழிகளை வழங்கி வருகின்றார்”

“நிலாச்சோறு ஊட்டுவது போல சஜித் போலி உறுதிமொழிகளை வழங்கி வருகின்றார்”

நாட்டை மீட்பதற்குரிய பொருளாதாரப் போரில் அரசாங்க ஊழியர்களின் பங்களிப்பு அளப்பரியது. எனவே, எதிரணிகளின் போலியான எண்கணித வார்த்தைகளுக்கு மயங்கி வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தை அரசாங்க ஊழியர்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் எமது நாட்டை கடவுளால்கூட காப்பாற்ற முடியாமல் போய்விடும் என்று கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான காலகட்டத்தில் கூட அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வுகளை வழங்கி, 2025 ஆம் ஆண்டு முதல் நிலையான சம்பள உயர்வு திட்டத்தை முன்வைத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டமே நடைமுறைக்கு சாத்தியம் என்பதை அரசாங்க ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,

“கிறீஸ் உட்பட பொருளாதாரம் வங்குரோத்து அடைந்த நாடுகளில் செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதற்கு முதலில் அரசாங்க துறைகளில் தான் கைவைக்கப்பட்டது. குறிப்பாக அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டது. கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன.

எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவ்வாறு செயற்படவில்லை. மலரில் இருந்து வண்டு தேன் எடுப்பதுபோல, அரசாங்க ஊழியர்களுக்கு வலி, சுமை ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அடுத்த வருடம் முதல் சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட திட்டங்களை அவர் முன்வைத்துள்ளார். இது எப்படி சாத்தியம் என்பதையும் விளக்கியுள்ளார்.

இந்நிலையில் அரசாங்க ஊழியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக போலியான வாக்குறுதிகளை எதிரணி ஜனாதிபதி வேட்பாளர்கள் வழங்கியுள்ளனர். அதை வழங்குவோம், இதை வழங்குவோம் என நடைமுறைக்கு சாத்தியமற்ற பல உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர். இதை நம்பி அரசாங்க ஊழியர்கள் வாக்களித்தால், நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கு செல்லும். தற்போது பெரும் சம்பளம் 50 வீதத்தால் குறையும்.

எனவே, நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாட்டின் நலன்கருதி மேலும் ஐந்தாண்டுகள் வழங்கும் வகையில் தமது வாக்குரிமையை அரச ஊழியர்கள் பயன்படுத்த வேண்டும்.

88,89 காலப்பகுதியில் சிவப்பு தோழர்களால் அரசாங்க துறைக்கு ஏற்படுத்தப்பட்ட இழப்பு பலருக்கு நினைவிருக்கும். அதேபோல நிலாச்சோறு ஊட்டுவதுபோல சஜித் பிரேமதாசவும், அரசாங்க ஊழியர்களிடமிருந்து வாக்குகளைப் பெறுவதற்கு போலி உறுதிமொழிகளை வழங்கிவருகின்றார். இவர்களுக்கு தமது வாக்குமூலம் அரசாங்க ஊழியர்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.” – என்றார் வேலுகுமார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )