“எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ரணில் விக்ரமசிங்கவே அதற்குப் பொறுப்பு”

“எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ரணில் விக்ரமசிங்கவே அதற்குப் பொறுப்பு”

‘‘என்னைக் கொல்வதற்கு அல்லது சிறையில் அடைப்பதற்கு சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ரணில் விக்ரமசிங்கவே அதற்குப் பொறுப்பு’’ என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (04) விசேட கூற்றைத் தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

‘‘சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் அஸ்லம் என்ற நபரும் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று, 05 வருடங்களாக குற்றச்செயல் ஒன்றுக்காக சந்தேக நபராக இருக்கும் ஒருவரைச் சந்தித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரிடம், அவரை பிணையில் வெளியில் எடுப்பதாகவும் இன்னும் பல்வேறு சலுகைகளை வழங்குவதாகவும் தெரிவித்து எனக்கு எதிராக வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு கோரியுள்ளனர்.

அதாவது, சந்தேகத்தின் பேரில் 05 வருடங்கள் சிறையிலிருக்கும் குறித்த நபரின் குற்றச்செயலுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்தே இந்த வாக்குமூலத்தை அவர்கள் கோரியுள்ளனர். மனுஷ நாணயக்கார குறித்த சந்தேக நபரை சந்தித்தமைக்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக நான் தீவிரமாகச் செயற்பட்டு வருபவன் என்பது அனைவருக்கும் தெரியும். இதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல், என்னை எப்படியாவது கொல்வதற்கு அல்லது ஏதாவது ஒரு பிரச்சினைக்குள் சிக்கவைத்து என்னை சிறையில் அடைப்பதற்கு சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறதென்பது எனக்குப் புலனாகிறது.

இந்த விடயங்கள் தொடர்பில் போதுமான ஆதாரங்களை வைத்துக்கொண்டே இதனைத் தெரிவிக்கிறேன். இது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்து, இந்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவுள்ளேன்.

எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ரணில் விக்ரமசிங்கவே பொறுப்புக் கூறவேண்டும் என்பதை நான் இந்தச் சபையில் பகிரங்கமாகத் தெரிவிக்கிறேன்.

ரணில் விக்ரமசிங்க போன்ற ஒருவரை இந்த நாட்டின் தலைவராக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு எமது வாழ்க்கையை அர்ப்பணித்து 15 வருடங்களாக பணியாற்றியமைக்காக நான் வெட்கப்படுகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )