“சஜித் – அநுரவிடம் நாட்டை ஒப்படைத்தால்  பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும்”

“சஜித் – அநுரவிடம் நாட்டை ஒப்படைத்தால் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும்”

இன்னும் 20 வருடங்களில் சிறந்த நாட்டில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை இந்நாட்டு இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிததுள்ளார்.

செப்டெம்பர் 21ஆம் திகதி நாட்டை உருவாக்க எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, சஜித்துக்கும் அநுரவுக்கும் நாட்டைக் கட்டியெழுப்ப எந்த திட்டமும் இல்லை எனவும் அவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சீர்குலைந்தால் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் எவராலும் நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று (11) இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து அனைவரும் வாழக்கூடிய நாட்டை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்த 05 வருடங்களில் இந்த வேலைத் திட்டத்தை வலுவாக அமுல்படுத்தி நாட்டின் பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் தமது பிள்ளைகளின் மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்கான வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“2004 ஆம் ஆண்டு சுனாமிக்கு பின்னர் நான் இங்கு வந்தேன். கோவில் பகுதிக்கு சென்றிருக்கிறேன். நாட்டை பொருளாதாரத்தை கட்டியெழுப்பும்போது திருக்கோவில் பகுதியையும் பலப்படுத்துவோம். 

நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்த வேளையிலேயே நாட்டை ஏற்றேன். 2022 அத்தியாவசிய பொருட்கள் ஒன்றும் எமக்கு கிடைக்கவில்லை. மின்சாரமும் இருக்கவில்லை. கஷ்டங்களுடன் வாழ்ந்தோம். பெண்கள் அதனை மறந்திருக்க வாய்ப்பில்லை. அன்று இப்போதிருக்கும் முன்னேற்றம் கிட்டும் என்று நினைக்கவில்லை. 

அனுரவும் சஜித்தும் அன்று இருக்கவில்லை. ஆனால் நான் ஏற்றதால் நாட்டில் தட்டுப்பாடுகள் நீங்கி நல்ல நிலைமை காணப்படுகிறது. அதனால் மக்கள் சுமூகமாக வாழ முடிந்துள்ளது.  அன்று பொருட்களின் விலை அதிகரித்தித்து காணப்பட்டது. ரூபாவின் பெறுமதி பெருமளவில் அதிகரித்திருந்தது.

இன்றும் மக்கள் வாழ்க்கை சுமைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். இருப்பினும் எனது முயற்சிகள் ரூபாவின் பெறுமதியை அதிகரிக்கச் செய்தமையால் ஓரளவு சுமூகமான நிலைமை வந்திருக்கிறது. பொருட்களின் விலையும் குறைந்திருக்கிறது.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவே மக்கள் மீது சில சுமைகளை சுமத்த வேண்டியிருந்தது. சர்வதேச நாணய நிதியம் எமது கடன் சுமை அதிகரித்தால் நாட்டின் நெருக்கடி மேலும் உக்கிரமடையுமென அறிவுறுத்தியது.

 நான் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீத கடனை மட்டும் பெறுவதற்கு மாத்திரம் அனுமதி கிடைத்தது. 

இந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே முன்னேற்றங்களை ஏற்படுத்தினோம். அதற்காகவே மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினோம். 

அடுத்த ஐந்து வருடங்களில் சுமையை மேலும் குறைக்க எதிர்பார்க்கிறோம். பொருட்களை கொள்வனவு செய்யவும் வாய்ப்பளிப்போம்.  இந்தப் பகுதியை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்திருக்கிறோம். விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளை இங்கும் முன்னெடுக்கலாம். 

திருக்கோவில் பகுதியிலும் விவசாய அபிவிருத்திக்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இங்குள்ள கடல் வளத்தினாலும் பயனடைய முடியும். 

மீன்பிடித் தொழில், சுற்றுலாத்துறை, கனிய வள வர்த்தகத்தைப் பலப்படுத்த எதிர்பார்க்கிறோம். விவசாயத்தை நவீனமயப்படுத்தி உலக உணவு உற்பத்தியில் பங்கெடுப்போம். 

திருகோணமலையில் பாரிய முதலீட்டு வலயத்தை உருவாக்குவோம். நாட்டின் அபிவிருத்தியை விரிவுபடுத்துவோம். 

மாகாண சபையை செயற்படுத்தி இப்பகுதி மக்களின் அபிவிருத்திக்கும் இளையோருக்கு நம்பிக்கை தரும் நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும். இன்றைய சிறுவர்களுக்கு 25 வயதாகும்போது அவர்கள் முன்னேற்றமடைந்த நாட்டில் வாழ வேண்டும் என்பதே எமது இலக்காகும். 

சஜித்தினாலும், அநுரவினாலும் அதனை செய்ய முடியாது. வாய் பேச்சினால் எவர் வேண்டுமானாலும் சாதிக்கலாம். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அவர்களால் முடியாது. 

மாறாக வீழ்த்தவே முடியும். எனவே பொருளாதார வீழ்ச்சியை விரும்பாதவர்கள் செப்டம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது, திருக்கோவிலுக்கு அபிவிருத்தியும் கிட்டாது.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )