அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித்துக்கு ஆதரவு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித்துக்கு ஆதரவு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் என, அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பிலான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு, நேற்று (14) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடம், அரசியல் அதிகாரபீடம் ஆகியன ஏகமனதாக தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கில் பல இடங்களுக்குச் சென்று மக்களையும் மாவட்ட பிரதிநிதிகளையும் கட்சித் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் சந்தித்து, மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தோம்.

அதற்கு முன்னதாக, கட்சியின் உயர்பீடத்திலும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினோம். இன்று மாலை கட்சியின் உயர்பீடம் மீண்டும் கூடியதுடன், உயர்பீட உறுப்பினர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துகொண்டோம்.

அதேபோன்று, மக்களின் கருத்துக்களும் உயர்பீடத்தில் முன்வைக்கப்பட்ட பின்னரே, சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

ஆதரவாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த போது, கட்சியின் உயர்பீட ம் எடுக்கும் முடிவையே தாங்கள் ஆதரிப்பதாகவும் உறுதியளித்தனர்.

எனவே, சஜித் பிரேமதாசவை வெல்ல வைப்பதற்கான தீவிரப் பிரசாரங்களில் ஈடுபடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது” என்று இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )