
மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை
அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமான ட்ரோன் தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சுறுத்தல் எதுவும் இல்லையென பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் விடுதலைப் புலிகளிடமிருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே அண்மையில் தெரிவித்திருந்தார்.
டிசம்பர் 23 முதல் ராஜபக் ஷவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட மீதமுள்ள இராணுவ அதிகாரிகளை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு திரும்பப் பெற்ற நடவடிக்கையை கண்டித்து மனோஜ் கமகே ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்தார்.
அத்துடன், அனுபவம் வாய்ந்த மற்றும் ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்களுக்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக பொலிஸ் அதிகாரிகளை மட்டுமே நியமிக்கும் நடவடிக்கையை கமகே விமர்சித்ததுடன், அச்சுறுத்தல்களின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு இது போதுமானதாக இல்லை எனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிலையிலே, பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கான எவ்வித அச்சுறுத்தலும் இல்லையெனவும், இது தொடர்பான பாதுகாப்பு நிலைமைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.