சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வருண் சக்கவர்த்தி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இதையடுத்து முதல் அரை இறுதியில் அவுஸ்திரேலியா அணியை, எதிர்த்து இந்தியா விளையாடவுள்ளது.

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதிய கடைசி லீக் ஆட்டம் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.

தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில்லும், அணித்தலைவர் ரோஹித் சர்மாவும் களமிறங்கினர்.

தொடக்கத்திலேயே தடுமாறிய ஷுப்மன் கில் 7 பந்துகளில் 2 ஓட்டங்களை எடுத்திருந்தபோது, மேட் ஹென்றி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ரோஹித்துடன், விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

17 பந்துகளில் 15 ஓட்டங்களை எடுத்திருந்த அணித்தலைவர் ரோஹித் சர்மா ஜேமிசன் பந்தில், வில் யங்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து கோலியுடன், ஸ்ரேயஸ் ஐயர் இணைந்தார்.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 30 ஆக இருந்தபோது விராட் கோலி ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 30 ஓட்டங்களை பெற்றது

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயரும், அக்சர் படேலும் நிதானமாக விளையாடி இன்னிங்ஸை கட்டமைத்தனர்.

இந்த ஜோடி 98 ஓட்டங்களை சேர்த்தது. அக்சர் 61 பந்துகளில் 42 ஓட்டங்களை பதிவுசெய்து ஆட்டமிழந்தார்.

ஆனால் மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் அரை சதம் கடந்தார். கடந்து 79 ஓட்டங்களை பெற்றபோது வில்லியம் ஓ ரூர்க்கி பந்தில் ஆட்டமிழந்தார்

தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 23 ஓட்டங்களையும் , ரவீந்திர ஜடேஜா 16 ஓட்டங்களையும் , முகமது ஷமி 5ஓட்டங்களையும் , குல்தீப் யாதவ் ஒரு ஒரு ஓட்டத்தையும் பதிவுசெய்தனர்.

50 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 249 ஓட்டங்களை பெற்றது .

இதைத் தொடர்ந்து 250 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியூஸிலாந்து அணி
45.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணிசார்பாக அதிகபட்சமாக கேன் வில்லியம்ஸன் 81 ஓட்டங்களையும் மிட்செல் சான்ட்னர் 28 ஓட்டங்களையும் வில் யங் 22 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.


பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளையும் , குல்தீப் யாதவ் 2விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த போட்டியில் ஆட்டநாயகனாக வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)