பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நீதி வழங்கும் எமதர்ம ராஜன்

பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நீதி வழங்கும் எமதர்ம ராஜன்

உலகில் பிறந்தவர்கள் அனைவருக்கும் உள்ள முக்கியமான இரண்டு கடமைகள் தானம் மற்றும் தர்மம் ஆகியவையாகும். தானம் என்பது ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்வது ஆகும். தர்மம் என்பது எந்தப் பலனையும் எதிர்பாராமல் செய்வது ஆகும்.

அவரவருக்கு உரிய வகையில் இவற்றை கடைப்பிடித்தால், உலகில் பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீர வேண்டும் என்ற வாழ்க்கை நியதியில், மகிழ்ச்சி கொண்ட மனதுடன் இந்த உலகை விட்டுச் செல்ல இயலும்.

மரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் எமதர்மன் ஆவார். அவருக்கு ‘தர்மராஜன்’ என்ற பெயரும், காலம் தவறாமல் உயிர்களைக் கவர்வதால் ‘காலன்’ என்ற பெயரும் உண்டு.

பேராசையில் மூழ்கி பொன், பொருள், புகழ் ஆகியவற்றை நினைத்தபடியே வாழ்பவர்கள்தான் மரணத்துக்கு பயப்படுவார்கள். சத்தியத்தைக் கடைப்பிடித்து நீதி, நேர்மையுடன் வாழ்பவர்களுக்கு மரண பயம் இருக்காது என்பதை ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அஷ்ட திக்கு பாலகர்களில் தெற்கு திசையின் அதிபதியான எமதர்மன் மகாவிஷ்ணுவின் பாரம்பரியத்தில் வந்தவர். அதாவது, மகாவிஷ்ணுவிடம் இருந்து தோன்றிய பிரம்மா, அவரிடமிருந்து தோன்றியவர்கள் மரீசி, காஸ்யபர், சூரியன் ஆகியோர். சூரியனிடம் இருந்து தோன்றியவரே எம தர்மன் ஆவார்.

விஸ்வகர்மாவின் மகள் சம்ப்ஜனாவை சூரியன் மணம் புரிந்ததில், அவர்களுக்கு மனு, எமன் என இரண்டு மகன்கள் மற்றும் யமுனா என்ற மகளும் பிறந்தனர்.

எமன் நீதி, நேர்மை தவறாத சத்தியத்தின் பிரதிநிதி. தனது சித்தி சாயாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சூரியனின் ஆணைப்படி சிவனைக் குறித்து கடும் தவம் புரிந்து, சிவபெருமானிடமிருந்து தென் திசை அதிபதி என்ற பட்டத்துடன், எமலோகத்துக்கும் அதிபதி ஆனார்.

சிவ பெருமான், தனது ரிஷபத்துக்கு சமமான தோற்றம் கொண்ட, கரிய எருமை மாடு ஒன்றை உருவாக்கி விஷ்ணுவின் அம்சமான எமனுக்கு வாகனமாக அருளியதுடன், ஜீவன்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப நீதி வழங்கும் அதிகாரத்தையும் அளித்தார்.

இரண்டு கூரிய சிகரங்களுக்கு நடுவில் உள்ள பாதாளத்தில் ஓடும் அக்னி ஆற்றுக்கு மேலே, சிகரங்களை இணைத்துக் கட்டிய ஒரு தலைமுடியில் கட்டித் தொங்கவிடப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்து எம தர்மன் நீதி வழங்குவதாக ஐதீகம்.

அவரது நீதி சிறிது பிசகினாலும், சிம்மாசனத்துடன் எமன், அக்னி ஆற்றில் விழ நேரிடும் என்ற நிலையில், சரியான நியாயம் வழங்குவதாகவும் புராணக்கதைகள் உள்ளன. தேவர்களுள் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராக எமதர்மன் குறிப்பிடப்படுகிறார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)