
பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு இனங்களின் கொம்புகளை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது
பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு இனங்களின் கொம்புகளை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படையினரால் வழங்கப்பட்ட புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், ஹிக்கடுவ தேசிய பூங்கா தலைமையகம் மற்றும் பெல்லன்வில-அத்திடிய வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் இணைந்து கடந்த மே 02ஆம் திகதி கோட்டை பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது, சுமார் 200,000 ரூபா விலைக்கு விற்பனைக்காக தயார் செய்யப்பட்டிருந்த மான் மற்றும் கலைமான் கொம்புகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, நீதவான் சந்தேகநபருக்கு 150,000 ரூபா அபராதம் விதித்தார்.
வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் எந்தவொரு பாகத்தையும் வைத்திருப்பது, கொண்டு செல்வது, காட்சிப்படுத்துவது அல்லது விற்பனை செய்வது சட்டவிரோதமானது என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இவ்வாறான விலங்கு பாகங்களை வைத்திருப்பவர்கள் குறித்து 1992 என்ற வனவிலங்கு அவசர அழைப்பு இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் அந்த திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

