
161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்
161ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல் தின நிகழ்வு பம்பலப்பிட்டி பொலிஸ் சிரேஷ்ட படையணி தலைமையகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுச் சின்னத்திற்கு முன்பாக, பதில் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்றது.
நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி, இரத்தம் சிந்தி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் உச்சபட்ச தியாகத்தை நினைவு கூரும் வகையில் பொலிஸ் மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதையொட்டி நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இன்று(21) பொலிஸ் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பொலிஸ் மாவீரர் நினைவுச்சின்னத்திற்கு மரியாதை செலுத்தும் அணிவகுப்பைத் தொடர்ந்து, பதில் பொலிஸ்மா அதிபர் மாவீரர் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
போர் மற்றும் சட்டம் ஒழுங்கு கடமைகளில் ஈடுபட்டிருந்த போது நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த 30 பொலிஸ் அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் அங்கவீனமுற்ற 20 பொலிஸ் அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும், பதில் பொலிஸ்மா அதிபர் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
மேலும் இந்நிகழ்வின்போது ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர்கள், அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.








