
மருந்துகளுக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணய வர்த்தமானி வெளியீடு
மருந்துகளுக்கான உச்சபட்ச சில்லறை விலை பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானியின் நோக்கம், மருந்துகளின் விலை நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மை, நியாயத்தன்மை, கட்டுப்படியான விலை ஆகியவற்றை உறுதி செய்வதாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்குள் விற்பனை செய்யப்படும் மருந்துகளுக்கான உச்சபட்ச சில்லறை விலை (MRP) மற்றும் உச்சபட்ச விலை வரம்பு (MCP) ஆகியவற்றை நிர்ணயிப்பதற்காக, 2025 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க மருந்துகள் (மருந்துகளுக்கான விலை நிர்ணய பொறிமுறை) விதிமுறைகள் தொடர்பான கட்டமைக்கப்பட்ட பொறிமுறையை இந்த வர்த்தமானி அறிமுகப்படுத்துகின்றது.
அதற்கமைய, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்த உச்சபட்ச சில்லறை விலையை மாற்றியமைக்கும் அதிகாரத்தை தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கொண்டுள்ளதுடன், நாணயப் பெறுமதியின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, பொதுமக்களின் நலனுக்காக எந்த நேரத்திலும் உச்சபட்ச சில்லறை விலைகளை மாற்றுவதற்கான சட்டபூர்வ அதிகாரத்தையும் ஆணைக்குழு கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.