“அனுரவால் பேச மட்டுமே முடியும்”

“அனுரவால் பேச மட்டுமே முடியும்”

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் நாட்டின் பொருளாதாரத்தில் எழுச்சி ஏற்படும் என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, சஜித்தின் ஆட்சியில் பெண்களுக்கு என விசேட திட்டம் ஒன்றும் வகுக்கப்படும் என்று புத்தளத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்யும் தேர்தல் பிரசாரக்
கூட்டங்கள் திங்கட்கிழமை (26) புத்தளம் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நடைபெற்றது.

அந்த வகையில் முந்தல் – வட்டவான் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது புத்தளம் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் என பெரும் எண்ணிக்கையிலான மக்களும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மேலும் பேசுகையில் கூறியதாவது,

“வரும் ஜனாதிபதித் தேர்தலில் புத்தளம் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயமாக வெற்றி பெரும் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், புத்தளத்தில் ஒரு இலட்சத்திற்கு மேல் வாக்குகளை எமது கட்சி பெற வேண்டும். புத்தளம் தான் முழு மாவட்டத்தையும் வெற்றி பெறச் செய்யும் தொகுதியாகும்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களையும் ஒரு முறை எடுத்துப் பாருங்கள். அனுரகுமார திசாநாயக்க நன்றாகப் பேசுவார். அவரால் பேச மட்டும் தான் முடியும். ஆனால், நாட்டு மக்களுக்கு இதுவரை அவரும், அவர் சார்ந்த கட்சியும் காத்திரமான நல்ல பணிகளை முன்னெடுக்கவில்லை.

இனியும் அவர்கள் எதையும் செய்யப் போவதுமில்லை. அவர் வகிக்கும் கட்சியின் பெயரைக் கேட்டால் மக்களுக்கு ஒருவிதமான அச்சம் இன்றும் இருக்கிறது. அத்துடன், நாமல் ராஜபக்ஷவும் ஒரு வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இந்த நாட்டை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தவர்கள் நாமலுடைய சிற்றப்பாக்கள்.

நாட்டை கொள்ளையடித்து வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள் என்பது தெளிவான உண்மையாகும். ஆனால், அவரைப் பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

அன்று தொலைபேசி சின்னத்தில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்த போது ஐக்கிய தேசியக்கட்சிக்குள் நாங்கள் பிளவுகளை ஏற்படுத்தினோம் என்று சொன்னார். ஐக்கிய தேசியக் கட்சி இன்று முழுமையாக இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டில்
யானையின் சின்னமும் இல்லை.

கட்சியின் பெயரும் இல்லை. இந்த நாட்டின் வரலாற்றில் இடம் பிடித்த மிகவும் பழமை வாய்ந்த கட்சிதான் ஐக்கிய தேசியக் கட்சியாகும். இந்தக் கட்சி பல அரசியல் தலைவர்களை உருவாக்கியது. நாட்டு மக்களுக்குப் பல வருடங்கள் சேவைகளைச் செய்தது” என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )