வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என கண்டறிய சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என கண்டறிய சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்

‘இலங்கையில் சகல சமூகங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக நீண்டகாலமாகக் காத்திருக்கின்றார்கள்.அவர்கள் கௌரவத்துடன் வாழ்வதற்கு இடமளிக்கும் அதேவேளை, அவர்களது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது எனும் உண்மையைக் கண்டறிவதற்குரிய சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும்.’ என செஞ்சிலுவை சர்வ தேசக்குழு வலியுறுத்தியுள்ளது.

இன்று (30) வலிந்து காணாமல் ஆக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வ
தேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனை முன்னிட்டு செஞ்சிலுவை சர்வதேசக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

‘உலகளாவிய ரீதியில் யுத்தம், வன்முறைகள், அனர்த்தங்கள், மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும் புலம்பெயர்வு போன்ற பல்வேறு காரணிகளால் தமது குடும்பத்தினரை, அன்புக்குரியவர்களை பிரிந்த சகலரையும் நாம் இன்றைய தினத்தில் நினைவுகூருகின்றோம்.

2023 ஆம் ஆண்டின் இறுதியில் உலகளாவிய ரீதியில் 2 இலட்சத்து 39 ஆயிரத்து 700 இற்கும் மேற்பட்டோர் காணாமல்போயிருக்கின்றனர் என்று செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச்சங்கக் கூட்டிணைவில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இருப்பினும் இந்த எண்ணிக்கை காணாமல் ஆக்கப்படல்களின் உண்மை நிலைவரத்தையும், தீவிரத்தன்மையையும் துல்லியமாகப் புலப்படுத்தவில்லை.

ஒவ்வொரு வலிந்து காணாமல் ஆக்கப்படல் சம்பவத்தின் பின்னாலும் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என அறிந்துகொள்ள முடியாததனால் உறவுகளுக்கு ஏற்படும் அளவற்ற துயரம் மறைந்திருக்கின்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தைப் பொறுத்த மட்டில், இத்தகையதோர் பிரச்சினை உண்டு என்பதை ஏற்றுக்கொள்வதும், அதற்குரிய தீர்வை வழங்குவதும் நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு
இன்றியமையாததாகும்.

மாறாக இப்போதும் தமது அன்புக்குரியவர்களைத் தேடிக்கொண்டிருக்கும் சகல சமூகத்தைச்சேர்ந்தவர்களினதும் துன்பியல் அனுபவங்களுக்குரிய அங்கீகாரத்தை வழங்க மறுப்பதானது அவர்கள் மத்தியில் அதீத கோபம் தூண்டப்படுவதற்கும், நல்லிணக்க செயன்முறையில் பின்னடைவு ஏற்படுவதற்குமே வழிகோலும்.

எனவே, இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாவிடின், தனி நபர்களால் மாத்திரமன்றி ஒட்டுமொத்த சமூகத்தாலும் முன்நோக்கிப் பயணிக்க முடியாது.

இலங்கையில் சகல சமூகங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக நீண்டகாலமாகக் காத்திருக்கின்றார்கள்.

அவர்கள் கௌரவத்துடன் வாழ்வதற்கு இடமளிக்கும் அதேவேளை,
அவர்களது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது எனும் உண்மையைக் கண்டறிவதற்குரிய சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.’ – என்றுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )