
கெஹல்பத்தர பத்மே குழுவினரை கைதுசெய்ய ASP ரொஹான் ஒலுகல, இந்தோனேசியா வந்திருப்பதாக பொலிஸில் இருந்தே தகவல் வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது
கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக ,உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல இந்தோனேசியாவிற்கு வருவதாக , கெஹல்பத்தர பத்மேவுக்கு பொலிஸில் இருந்தே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினரை தடுத்து வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் போது இந்த விடயங்கள் தெரியவந்தன.
இதே வேளை , கெஹல்பத்தர பத்மேவைக் கைது செய்வதற்காக சர்வதேச போலீசார் (இன்டர்போல்) பிறப்பித்த ரெட் வாரண்ட் குறித்தும் இலங்கைப் பொலிஸில் இருந்தே தகவல் தெவிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய இலங்கை பொலிஸ் , இந்தோனேஷிய பொலிஸ் மற்றும் சர்வதேச போலீஸ் இணைந்த பாரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையிலிருந்து இந்த நடவடிக்கையில் இணைந்து கொண்ட பொலிஸ் அதிகாரிகள் இந்தோனேசியாவில் பல நாட்கள் அயராது உழைத்து, தாம் எதிர்கொண்ட பாரிய அசௌகரியங்களையும் பொருட்படுத்தாது குற்றவாளிகளை கைது செய்தமை சகலரும் அறிந்த விடயமாகும் .
உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல பல நாட்களாக நாட்டில் இல்லை என தருண் என்ற குற்றவாளிக்கு பொலிஸில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது ,
இதனையடுத்து தருண் என்ற குற்றவாளி ஒலுகலவின் தொலைபேசி இலக்கத்தின் ஐ.பி எண்ணை ஆராய்ந்ததாகவும், அதன் மூலம் ஒலுகல இந்தோனேசியாவில் இருப்பதை அறிந்து , தகவல் பத்மேவுக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து ,கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் குடு நிலங்க ஆகியோர் ,இந்தோனேஷியாவில் அதுவரை தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை , கெஹல்பத்தர பத்மேவை கைது செய்வதற்காக இன்டர்போல் மூலம் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு வாரண்டின் புகைப்படம் கெஹல்பத்தர பத்மேவின் மொபைல் போனில் காணப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் துறையில் உள்ள சில ஊழல் அதிகாரிகள், கெஹல்பத்தர பத்மே குழுவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளதாகவும், அவர்களுக்கு உளவுத்துறை தகவல்களை வழங்கியுள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

