
மர்மமான முறையில் உயிரிழந்த திறைசேரி அதிகாரியின் பிரேதப் பரிசோதனை – 4 தடயவியல் வைத்தியர்கள் கொண்ட குழு நியமனம்
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் பிரேதப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக தடயவியல் மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நான்கு தடயவியல் மருத்துவ நிபுணர்களைக் கொண்ட இந்த குழுவை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
திறைசேரியின் வெளிநாட்டு கடன் செலுத்துகையின் போது, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்பினருக்கு கைமாறிய சம்பவம் தொடர்பாக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்த என்பவரே நேற்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் வீட்டிற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதுடன், இது தற்கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை நேற்று இடம்பெற்றதுடன், பிரேதப் பரிசோதனைக்காக சடலம் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

