
டித்வா புயல் ; இலங்கைக்கு சீனா அவசர நிவாரண உதவி
டித்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக 1 இலட்சம் அமெரிக்க டொலர் அவசர நிவாரண உதவியை சீனா வழங்கியுள்ளது.
இந்த நிதி, சீன செஞ்சிலுவை சங்கத்தினால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு வழங்கப்பட்டதாக இலங்கைக்கான சீன தூதரகம் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தள கணக்கில் அறிவித்துள்ளது.
தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், புயலால் பெரும் நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுடன் சீன மக்களும் இரக்கம் மற்றும் ஒற்றுமையுடன் இணைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினரின் ஆதரவுடன், இலங்கை மக்கள் இந்த அனர்த்தத்திலிருந்து விரைவில் மீள முடியும் என்பதில் நம்பிக்கை உள்ளது என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான சீன வர்த்தக சம்மேளனம் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் சீனர்கள் சங்கம் இணைந்து நன்கொடை சேகரிப்பு முயற்சிகளையும் ஆரம்பித்துள்ளன. இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக மொத்தம் 10 மில்லியன் ரூபா சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

