
நான் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருக்க வேண்டும்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தாம் எட்டு போர்களை நிறுத்தியுள்ளதாகக் கூறி, அமைதிக்கான நோபல் பரிசு தமக்கு வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
எனினும், 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டதை அடுத்து, டிரம்ப் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசுகளை வழங்கும் நார்வே நாட்டின் பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருக்கு ஜனாதிபதி டிரம்ப் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “எட்டு போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை.
எனவே இனி அமைதி குறித்து மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு பதிலளித்த நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர், “நோபல் அமைதிப் பரிசு நார்வே அரசாங்கத்தால் வழங்கப்படுவதில்லை. அது ஒரு சுதந்திரமான நோபல் குழுவால் வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன்” என தெரிவித்தார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜனாதிபதி டிரம்ப்,
“நான் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருக்க வேண்டும். நான் லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளேன். நார்வேவுக்கும் நோபல் பரிசுக்கும் தொடர்பில்லை என்று மக்கள் நம்ப வேண்டாம்” எனக் கூறினார்.
மேலும், “நோபல் குழு நார்வேவில்தான் இயங்குகிறது. அந்தக் குழுவை நார்வே அரசு தான் கட்டுப்படுத்துகிறது. நார்வே மீது நான் வைத்திருந்த மரியாதையை இழந்துவிட்டேன்” என அவர் கடுமையாக விமர்சித்தார்.

