
சட்டத்தரணி சம்பவத்தைக் கண்டித்து கொழும்பில் இன்று சட்டத்தரணிகள் பாரிய எதிர்ப்புப் பேரணி
தலைங்கம, அக்குரேகொட பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற இரட்டைக்கொலைச் சம்பவத்தைக் கண்டித்து, கொழும்பில் இன்று சட்டத்தரணிகள் பாரிய எதிர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைமையில் ஆரம்பமான இந்தப் பேரணி, உச்ச நீதிமன்ற வளாகத்திலிருந்து ஆரம்பித்து சங்கத்தின் தலைமையகம் வரை சென்றது.
சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இன்று நாடு முழுவதும் உள்ள நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகி இருக்க சட்டத்தரணிகள் தீர்மானித்தனர்.
“இதுவே கடைசிப் படுகொலையாக இருக்க வேண்டும்” என ஊடகங்களிடம் பேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய வலியுறுத்தினார்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றும், இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்றைய தினம் (15) விசேட கூட்டம் ஒன்றை கூட்டி, இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்திருந்தது.
இந்த படுகொலை தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தலையீட்ட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.

