
கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, இன்று (03) முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் மே 03 முதல் 06ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை, மாலைதீவு ஜனாதிபதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை வழியாக கொழும்பிற்குள் பிரவேசிக்கவுள்ளார்.
இதனையடுத்து, அந்த நேரப்பகுதியில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், பொதுமக்கள் எதிர்கொள்ளக்கூடிய அசௌகரியங்களை குறைப்பதற்காக மாற்று வழித்தடங்களைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன், பாதுகாப்பு காரணங்களுக்காக சில வீதிகளில் தற்காலிகமாக போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

