
ஈரான் உடன்படிக்கைக்கு வாய்ப்பளிப்பதற்காக புராஜெக்ட் ஃப்ரீடம் இராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தபட்டது – டிரம்ப்
ஈரானுடன் எட்டப்படவுள்ள உடன்படிக்கைக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்ட “புராஜெக்ட் ஃப்ரீடம்” (Project Freedom) இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
இருப்பினும், ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், பாகிஸ்தான் உள்ளிட்ட மத்தியஸ்த நாடுகளின் கோரிக்கைகள் மற்றும் தற்போது பேச்சுவார்த்தை மட்டத்தில் உள்ள உடன்படிக்கைகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தை இறுதி செய்து கையெழுத்திட முடியுமா என்று பார்ப்பதற்காக, குறுகிய காலத்திற்கு இந்த நடவடிக்கையை நிறுத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம்,என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட புராஜெக்ட் ஃப்ரீடம் நடவடிக்கை காரணமாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடும் பதற்றம் நிலவியதுடன், இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிப் பிரயோகங்களும் இடம்பெற்றதாகப் பதிவாகியிருந்தது.
இதற்கிடையில், ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
எனினும், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதற்கு கடுமையான மற்றும் அழிவுகரமான பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக வொஷிங்டன் எச்சரித்துள்ளது.

