
மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை
மத்திய கிழக்கில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து இலங்கை தனது தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், முக்கிய எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்தும் இலங்கை அவதானம் செலுத்தியுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் பின்வரும் முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:
குறித்த பிராந்தியத்தில் இலங்கையர்கள் உட்பட பெருமளவிலான சர்வதேச புலம்பெயர்ந்த சமூகம் வசித்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பும் நல்வாழ்வும் இலங்கைக்கு மிக முக்கியமான விடயமாகும்.
பொதுமக்களின் பாதுகாப்பு, சிவில் உட்கட்டமைப்புகள் மற்றும் அத்தியாவசிய உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக இலங்கை உறுதியாகப் பாடுபடுகிறது.
மோதல்கள் தீவிரமடைவதைத் தவிர்க்க அனைத்துத் தரப்பினரும் தங்களது உச்சகட்ட நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்றும் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

