
தொண்டைமானாறு சந்நிதி முருகன் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
இறுதி யுத்தத்தின் போது உயிர்வாழ தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கஞ்சி குடித்த நினைவினை கூரும் வகையில் நடைபெறும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (12) யாழ்ப்பாணம் தொண்டைமானாறு சந்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மே 12 முதல் 18 வரையான காலப்பகுதி “முள்ளிவாய்க்கால் வாரம்” என வருடந்தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இறுதி யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள சூழலில் இந்நினைவு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இறுதி யுத்த காலத்தில் முள்ளிவாய்க்காலில் உணவின்றி உயிர் வாழ்ந்த மக்கள் கஞ்சி மட்டுமே அருந்திய நிலையை நினைவுகூரும் வகையில், வருடாந்தம் கஞ்சி சமைத்து பொதுமக்களுக்கு வழங்கும் வழக்கம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் நடைபெற்ற இன்றைய ஆரம்ப நிகழ்வில், அதிகளவான மக்கள் கலந்துகொண்டு சிரட்டைகளில் வழங்கப்பட்ட கஞ்சியை பெற்றுண்டு, முள்ளிவாய்க்கால் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதேச மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு கஞ்சி வழங்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
பிரதீபன்

